
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை, மதுபான விற்பனை உரிமங்கள் சட்டவிரோதமாகவும் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் வழங்கப்பட்டிருப்பதால், உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மாத்தளையைச் சேர்ந்த தங்கவேலு தர்மேந்திர ராஜா மற்றும் புத்பிட்டியவைச் சேர்ந்த பிரசாத் தினுக பிரியதர்ஷன ஆகிய இரண்டு மதுபான உரிமதாரர்கள் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
முன்னாள் கலால் ஆணையர் ஜெனரல் எம்.ஜே. குணசிறி, முன்னாள் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சின் செயலாளர், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் வசந்த சமரசிங்க மற்றும் பிமல் ரத்நாயக்க மற்றும் கலால் துறை அதிகாரிகள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் 21 ஆம் திகதி வரை, சட்டத்திற்கு முரணான முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஜனநாயக தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கும், அதற்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபான விற்பனை உரிமங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் போது, நிதியமைச்சர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க தொழிலதிபர்களிடமிருந்து தனக்குத் தேவையான ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த உரிமங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.