
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் 74 வயதுடைய சக்திவேல் ராஜகுமாரி என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை சம்பவம் மூதூர் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவரின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.
கணவர் வெளிநாட்டில் வசித்து வருபவர் எனவும் சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் அவரது பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.