
பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழு ஒன்று நேற்று (16) மாலை பாணந்துறை கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
இதன்போது பாணந்துறை கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட பேரலையில் சிக்கி ஐந்து பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.
இந்த வேளையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாணந்துறை கடலோர கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் இணைந்து நீரில் மூழ்கிய மூன்று பேரை மீட்டனர்.
எனினும் ஏனைய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
நீரில் மூழ்கி காணாமல் போனவர்கள் மொஹமட் இர்பான் மொஹமட் முஹம்மது என்ற 15 வயது சிறுவனும், பண்டாரகம, அட்டலுகம பகுதியைச் சேர்ந்த யாசிர் அரபாத் அகமது என்ற மாணவனும் ஆவர்.
நீரில் மூழ்கிய இருவரதும் சடலங்கள் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.