
மாணவி அம்ஷிகாவின் தற்கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் கணித பாட ஆசிரியரால், குறித்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி 6ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்தார்.
சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் மே 4ஆம் திகதி ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கொழும்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்த வழக்கு மே 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.