
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு பிற்பாடு கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு அரச தரப்புக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சி 48 ஆசனங்களை பெற்று முன்னிலை வகிக்கின்ற அதேநேரம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து 69 ஆசனங்களை பெற்றுள்ளன.
தேசிய மக்கள் சக்தி தனிக்கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை. இதனால் தனித்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்க வியூகம் அமைத்து வருகின்றன.
இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, சிறீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய சுயேச்சை குழுக்களுடன் கடந்த வாரம் நடாத்திய பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, முக்கிய கலந்துரையாடல் ஒன்று இந்த வாரம் நடைபெறும் என்றும் இந்தக் கலந்துரையாடலில் கொழும்பு மாநகர ஆட்சி அமைப்பது தொடர்பில் இறுதி செய்யப்படும் என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.