
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கோடு பிளவுகளைக் கைவிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
அதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று ஒன்றுகூடி கலந்துரையாடினர்.
அதிகாரத்தை நிறுவவுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பெயர் பட்டியலை தயாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இன்று (15) ஒன்றுகூடி முடிவெடுக்கவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதித்துவப்படுத்தி நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அனுர பிரியதர்ஷன யாப்பா, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அசங்க நவரத்ன, சுகீஸ்வர பண்டார, வீர குமார திசாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் சி தொலவத்த, நிமல் லன்சா, மொஹமட் முஸம்மில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த ஒன்றிணைந்த கூட்டங்களைக் கூட்டுவதற்கான பணி முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆளும் கட்சிக்கு எதிரான அனைத்து குழுக்களுடனும் கலந்துரையாடல்கள் மூலம் அதிகாரத்தை நிறுவுவதோடு கூடுதலாக இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.