சஹ்ரானுடன் தொடர்பை பேணிய 52 பேரிடம் குற்ற தடுப்பு பிரிவினர் வாக்கு மூலம் பதிவு

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் காசிமுடன் தொடர்பை பேணி வந்ததாக அடையாளம் காணப்பட்ட  52 பேருக்கு எதிரான  வாக்கு மூலங்களை பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் வீடு வீடாக சென்று பதிவு செய்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 2019 ஏப்பிரல் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரானிடம் பயிற்சி முகாம் மற்றும் அதனுடன் இணைந்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய காத்தான்குடியைச் சேர்ந்த ஆண் பெண்கள் என நூற்றுக்கு மேற்பட்டோரை கடந்த காலத்தில் பாதுகாப்பு படைத்துறையைச் சேர்ந்த காவல்துறையினர். சிஜடியினர், பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி தொடர்ந்து தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் 5 பேர் வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்தது இருந்தபோதும் தொடர்ந்து பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து மேற்கொண்டுவரும் விசாரணையின் போது ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் காசிமுடன் முகநூல் மற்றும் தொலைபேசி, போன்றவற்றின் ஊடாக தொடர்புகளை பேணிவந்த காத்தான்குடியைச் சேர்ந்த 52 பேரை அடையாளம் கண்டுகொண்டனர்.

இந்த நிலையில் இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையை நேற்று சனிக்கிழமை (11) பயங்கரவாத  குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்து வீடுவீடாக சென்று அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துவருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir