இனவாதி அமைச்சர் விதுர மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரை இனவாதி அமைச்சர் விதுர விக்ரமசிங்கவை ஏன் கண்டிக்கவில்லை என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் கலாசார மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உடனடியாக பதவி விலகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

குறுந்தூர் மலையிலே பௌதத் விகாரை கட்டுமானங்களை நிறுத்துமாறு  நீதிமன் கட்டளை பிறப்பிக்கப்ட்டிருந்த போதும், இரகசியமான முறையில் விகாரையை அமைத்து அதற்கான பூஜை வழிபாடுகளுக்கு இராணுவ பட்டாளத்துடன் சென்ற விதுர விக்ரமநாயக்கவே அந்த பிரச்சினையின் கதாநாயகர் எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்திலே தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டத்திலே தொல்பொருள் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மீண்டும் விடுவிப்பதற்கான கடிதத்தினை மீளப்பெற்றதோடு, இன்னுமொரு கடிதம் அனுப்ப முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

அதன் போது, அந்த கடிதத்தினை அனுப்ப முடியாது விடில் உங்களுடைய ராஜினாமா கடிதத்தினை வழங்குங்கள் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டதுடன், வரலாறு தொடர்பாக வகுப்பு ஒன்றையும் எடுத்திருந்தார் எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எனவே இவை அனைத்திற்கும் பொறுப்பானவர் மிகவும் இனத்துவேஷம் பிடித்த முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயக்கவின் மகன் விதுர விக்ரமநாயக்கவே ஆகவே அவருக்கு எதிராகவே முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணிப்பாளரிற்கு இவ்வாறாக அச்சுறுத்துவதை விட அவரை இவ்வளவு காலமும் தவறான பாதையிலே வழிநடத்தி அவருக்கு பின்னால் நின்ற விதுர விக்கிரமநாயக்கவை இந்த கூட்டத்திற்கு அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என தான் அந்த இடத்திலே கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, மட்டக்களப்பு மாவட்ட மலைக்கு விதுர விக்ரமநாயக்க சென்ற போது, பாரிய எதிர்ப்பிற்கு மத்தியில் அவரை விரட்டி அடித்தோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தான் மட்டக்களப்பில் தொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைகள் குறைவாக உள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் சில மட்டக்களப்பின் சில இடங்களில் தொல்லைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஜனாதிபதி இதுவரைக்கும் விதுர விக்ரமநாயக்கவை ஏன் கண்டிக்கவில்லை? உண்மையை சொன்னனால் அவரை பதவியில் இருந்து விலக்க வேண்டும். ஏனெனில் அவரே தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு ஆலோசனையையும் நிதியையும் வழங்கினார். அத்துடன் இராணுவ தலையீட்டுடன் இந்த விடங்களையும் நேரடியாக செய்தார்.

அந்த இடத்தில் பணிப்பாளரிடம் ராஜினாமா கடிதத்தினை தாருங்கள் என கேட்டது ஒரு விடயமாக இருப்பினும் அதற்கு மூல காரணம் விதுர விக்ரமநாயக்கவே.

இன்று இதையடுத்து பலர் ஜனாதிபதி ஆக்கபூர்வமான முடிவினை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், இன்னும் அந்த அமைச்சர் பதவியிலேயே உள்ளார்.

நாளை  ஜனாதிபதி இல்லாது போனால் அமைச்சர் புதிய பணிப்பாளரை வைத்து அனைத்தையும் நடத்துவார்.

ஆகவே நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் எந்தவொரு விடயத்தினையும் பார்த்து நாம் திருப்தி அடைய முடியாது.

இந்த முடிவு வெறுமனே எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் வருமாயின் அதில் மக்களின் ஆதரவினை பெறுவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சியாகும்.

மாறாக உண்மையாகவே இதற்கு அவர் தீர்வு எடுப்பாராயின் இனவாதியான விதுர விக்ரமநாயக்கவை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும்.

அவர் செருப்பு போடாமல் இருப்பதால் மட்டும் புண்ணியவான் ஆகிடவோ அல்லது நல்வர் ஆகிடவோ முடியாது.

தமிழ் மக்களிற்கு துரோகம் செய்து அவர்களின் காணியை பறிப்பதும், சிவன் ஆலயத்தை உடைத்தெறிந்து விட்டு அதில் இன்னொரு மத ஆலயத்தை அமைப்பது போன்ற குற்றங்கள் கடவுளுக்கே பொறுக்காது எனவும் சாணக்கியன் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply