யாழ் போதனா வைத்தியசாலை விடுதியில் இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (18) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தாவடி கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் பவிசன் (வயது 22) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரின் நண்பர் எனவும், அவர் அடிக்கடி இந்த விடுதிக்கு சென்று வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் நேற்றைய தினம் இரவு விடுதிக்கு வந்துள்ளார். எனினும், பின்னர் அவரை காணாத நிலையில், அவரை தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சடலம் காணப்பட்ட இடத்திற்கு அருகில் தேசிக்காய் , பீடி , தீப்பெட்டி , பியர் , ஊசி (சிரிஞ்) உள்ளிட்டவை காணப்படுவதால் போதையில் கைகளை தானே வெட்டியதால் , இரத்த போக்கு காரணமாக குறித்த இளைஞன் உயிரிழந்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் நண்பரான பாதுகாப்பு உத்தியோகத்தர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply