சட்டத்தரணிகளின் கூச்சலுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டேன் – சரத் வீரசேகர பதில்!

முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு  கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு தான் அஞ்சப்போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியதன் மூலம் தொல்லியல் திணைக்களத்தின் சட்டங்களை அவர் மீறியுள்ளதாகவும், நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் கடுமையான விமர்சனம் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் நேற்று முன்தினம் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து நீதிமன்றங்கள் முன்பாக அடையாளக் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, சரத் வீரசேகர  நாடாளுமன்றத்துக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியம் இருந்தால் வெளியில் வந்து கதைக்க வேண்டும் என சவால் விடுத்திருந்தனர்.

இந்தச் சவால் தொடர்பாக ஊடகவியலாளர்கள் சரத் வீரசேகரவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் தான் தெரிவித்திருந்த கருத்திற்குத்தான் வடக்கு கிழக்கு சட்டத்தரணிகள் சவால் விடுத்துள்ளனர்.

எனவே, அவர்களின் சவாலுக்கு தான் நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் வழங்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply