திருகோணமலையில் பரபரப்பு – ஆளுநரின் உத்தரவை மீறி விகாரை கட்டுமானம்!

கிழக்கு ஆளுநரின் தடையுத்தரவை மீறி திருகோணமலை பெரியகுளம் சந்தியில் பௌத்த கொடிகள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோத விகாரை கட்டுமானம் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு அருகில் உள்ள இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பதாகை இன்று காலை பௌத்த பிக்குகள் சிலரால் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதாகை நடப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் பொலிஸார் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் குறித்த விகாரை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இச்செயற்பாடானது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் குறித்த விகாரைக்கான பணிகளை இடைநிறுத்தக்கோரி ஆளுநரினால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சட்ட விரோதமான முறையில் கட்டப்படும் குறித்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 03 ஆம் திகதி போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply