கே.பி, கருணா, பிள்ளையான் போன்றோரை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்? சம்பிக்க கேள்வி!

குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான்,  மற்றும் ராம், நகுலன் என அழைக்கப்படும் இரண்டு கொலையாளிகளும் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவிடம் சம்பிக்க ரணவக்க விளக்கம் கோரியுள்ளார்.

கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இராணுவப் பாதுகாப்பில் வசிக்கின்ற அதேசமயம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் கிராமப்புற வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரணில் விக்ரமசிங்க-ராஜபக்ஷ அரசாங்கத்தில் பணியாற்றுகின்றார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த சம்பிக்க ரணவக்க, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு குறித்து நாரஹேன்பிட்டி கட்சி அலுவலகத்தில் வார இறுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒரு காலத்தில் பிள்ளையானின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த ஹன்சீர் அசாத் மௌலானாவின் வெளிப்பாட்டின் அடிப்படையில் சனல் 4 ஆவணப்படம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

மேலும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்குமாறு கட்டளையிடும் வகையில் விடுதலைப்புலிகளுக்கு பணம் செலுத்தியமை தொடர்பிலும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு பாரிய குற்றச் செயல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக தமது கட்சியை உள்ளடக்கிய எதிர்கால அரசாங்கம் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவை தளமாகக் கொண்ட UNHRC மற்றும் பெயரிடப்படாத ஐரோப்பிய புலனாய்வு சேவைகள் பிள்ளையானின் உதவியாளர் மௌலானாவை அணுகியதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தொடர்பாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள சமர்ப்பிப்புகளை கருத்திற் கொண்டு மௌலானாவின் குற்றச்சாட்டுக்கள் ஆராயப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆதரவை அவர்கள் எவ்வாறு பெற்றனர் என்பதை விளக்க வேண்டும் எனவும் ராஜபக்சக்களிடம் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply