ஐ.நா மனிதவுரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும்!

ஐ.நா மனிதவுரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும் என ஐ.நா இலங்கை பிரதிநிதியுடனான சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதவுரிமை பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, கட்சியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் மற்றும் சமாதான சாளர ஒருங்கிணைப்பாளர் தாரக ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த மனோ கணேசன்,

“இலங்கை தொடர்பான ஐ.நா நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார்.

இலங்கையில்,  தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) ஆகியவை இன்னமும் இழுபறியில் இருக்கின்றன.

இரு தரப்பிலும் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக மறுக்கின்றமையே இதற்கு பிரதான காரணம் என  முன்னாள் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற முறையில் கூறியதை ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்.

பதினைந்து இலட்சம் மலையக தமிழர் மத்தியில் சுமார் ஏழரை இலட்சம் பேர் இன்னும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். அவர்களில் ஒன்றரை இலட்சம் பேர் தோட்ட தொழிலாளர்கள்.

இந்த பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களே இலங்கை சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியவர்கள் என்ற தரவுகளுடனான ஆவணத்தை எழுத்து மூலமாக ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரேக்கு நாம் வழங்கினோம்.

இலங்கை ஐ.நா நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார்” என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply