
எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம் ஒன்றினுள் வசித்து வந்த 69 வயதுடைய பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மார்ச் 25ஆம் திகதி இடம்பெற்றது.
சம்பவம் குறித்த விசாரணைகளை எப்பாவல பொலிஸார் முன்னெடுத்து வந்திருந்தனர்.
இந்த நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர், கட்டுநாயக்க பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், எப்பாவல, கிரலோகம பிரதேசத்தில் உள்ள மடத்தில் வசித்து வந்த பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கிரலோகமவில் உள்ள ருக்சேவன மடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றிய 69 வயதான விலச்சியே பிரேமரத்ன தேரர் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.
கொலையின் போது அவரது உடலின் பல பகுதிகளில் கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.
இதனையடுத்து எப்பாவல பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த போது, பிக்குவிற்கு முச்சக்கர வண்டி மற்றும் சாரதி ஒருவர் இருப்பது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் எப்பாவல வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் காணியொன்றில், கைவிடப்பட்ட நிலையில் பிக்குவுக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
எனினும் அதன் சாரதியைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அனுராதபுரம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் திலின ஹேவாபதிரனவின் அறிவுறுத்தலின் பேரில், எப்பாவல பொலிஸாரால் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன்படி காணாமல் போனவரின் தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், அவர் கட்டுநாயக்க பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.
பின்னர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பொலிஸ் விசாரணையின் போது, கொலை செய்யப்பட்ட பிக்குவுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் கொலையைச் செய்துவிட்டு, தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.