
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்றைய தினம்(25) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
2984 ஆவது நாளாக நீதி கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். எமது உறவுகளை தேடி அலைந்து திரிகின்றோம்.
எனினும் இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசாங்கமும் எமக்கான உரிய தீர்வினை பெற்றுத் தரவில்லை எனவும், சர்வதேசத்திடம் ஒரு முகத்துடனும் எம்மிடம் ஒரு முகத்துடனும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வினை பெற்று தருவோம் என்ற வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
ஆனாலும் இதுவரையில் எந்த விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தனர்.