மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்த – ஜெகான் பரிந்துரை

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி சிறுபான்மை மக்களுக்கு தங்கள் பிரதேசத்தின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சிறுபான்மை மக்கள் எமது நாட்டின் ஆட்சியில் எந்த பங்குதாரர்களும் அல்ல என்ற நிலை ஏற்படும் என தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்தார். முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைக்குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கை எடுத்தல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமா்வு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆணைக்குழுவின் தலைவரும் உயா் நீதிமன்ற நீதியரசருமான துலிப் நவாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இன நல்லிணக்கத்துக்கு தனது பரிந்துரைகளை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாகாணசபை மூலமாகவே சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் வாழும் பிரதேசத்தை, அவர்கள் எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் கிடைக்கின்றது. அதனால் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அந்த மக்களும் எமது ஆட்சியில் பங்குதாரர்கள் என்பதை உறுதிப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அந்த மக்கள் எமது நாட்டின் ஆட்சியில் எந்த பங்குதாரர்களும் அல்ல என்ற நிலை ஏற்படும். ஏனெனில் மத்திய அரசில் சிறுபான்மை மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

மாகாணசபை தேர்தலை நடத்தி அந்த பிரதேசங்களில் அவர்களுக்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அவர்களும் இந்த நாட்டின் பங்குதாரர்கள் என்பதை உணர்ந்துகொள்வார்கள். அதனால் மாகாணசபை முறைமை நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமாகும் என நாங்கள் தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir