மலையக வாக்குகளை ஏலம் போட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் – வடிவேல் சுரேஷ்

மலையக மக்களின் வாக்குகள் இல்லாது எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த வாக்குகளை எதிர்காலத்தில் எவரும் ஏலம் போட இடமளிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒட்டு மொத்தமாக மலையக மக்களின் 17 இலட்சம் வாக்குகள் இருப்பதாகவும் இந்த வாக்குகள் இல்லாமல் எவரும் ஆட்சியமைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்று முகாமைத்துவம் செய்யும் ஹைபொரஸ்ட் தோட்ட நிர்வாகம், அத்தோட்ட தொழிலாளர்களுக்கு இழைத்து வரும் பல்வேறு அநீதிகளுக்கு தீர்வு காணும் வகையில்  குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

கடந்த காலங்களைப் போல மலையக மக்களின் வாக்குகளை யாரும் விலை பேசிட முடியாது. குறிப்பாக மலையக மக்களின் வாக்குகளை விலை பேசிட தான் இடம் கொடுக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆகவே மலையக மக்களுடைய 17 இலட்சம் வாக்குகள் இல்லாமல் யாரும் இந்த நாட்டில் அரசாங்கத்தை அமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என தாம் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் எம்மிடத்திலும் சில குறை நிறைகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு எமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.

அத்துடன் எமது மலையக மக்களுக்கும், மலையகம் சார்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதாரம் உட்பட பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ள இந்த நிலையில் தேர்தல் ஒன்று பற்றி சிந்திக்க முடியாதுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் பெருந்தோட்ட மலையக மக்களுக்கும் மலையகத்தை சார்ந்த ஏனைய மக்களுக்கும் சமுர்த்தி உதவிகள், உலக வங்கியால் வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள், வருமானம் குறைந்தவர்களாக வழங்கப்படும் சலுகைகள் என்பன மலையக மக்களுக்கு வழங்கப்படுவது அரிதாக உள்ளது.

மலையக மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக காணப்படுவதால் நாட்டில் ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் உதவு பட்டியலில் இவர்களும் உள்ளடக்கப்பட்ட வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகளை நியமித்துள்ளார். எனவே எதிர்காலத்தில் மலையகத்தை சார்ந்த மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயலாற்றுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்படுவோர் தமது பொறுப்புகளை மீறும் பட்சத்தில் அது ஒரு பாரிய பாதிப்பை இந்த நாட்டில் ஏற்படுத்தும். அது தேர்தலிலும் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் விடயங்களிலும் இருக்கலாம்.

எனவே எமது மக்களின் வாழ்வாதார பிரச்சினை பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காணப்படாமல் தேர்தல் ஒன்றுக்கு சிந்திக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply