கடன் மறுசீரமைப்பு – இலங்கை அமைச்சருக்கு சீனா விடுத்துள்ள அழைப்பு!

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் நாளைய தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் அலி சப்ரி, சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு முக்கிய உயர்மட்ட அதிகாரிகள் பலருடனும் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியுதவி செயற்திட்டத்தின் கீழ்  2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றான கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்க வேண்டிய கடப்பாட்டுக்கு இலங்கை உள்ளாகியிருக்கின்றது.

அதன்படி கடன்மறுசீரமைப்பு குறித்து முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர் நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளையும் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

அதனை முன்னிறுத்தி இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குழுவொன்றை உருவாக்கியுள்ளன.

நாட்டின் மிகமுக்கிய இருதரப்புக் கடன்வழங்குனரான சீனா பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் கண்காணிப்பாளராக பங்கெடுத்து வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே சீன அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தல் குறித்தும் அமைச்சர் அலி சப்ரி பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும், இரு நாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விரிவாக இதன்போது கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply