ஜனவரி முதல் இதுவரை 47,000 நோயாளர்கள் – டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கும்!

எதிர்வரும் பருவகாலத்தை தொடர்ந்து டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். பொதுவாக ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும் என உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 கலந்துரையாடல்’ நிகழ்வில் நேற்று (23) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர், ”

இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

எதிர்வரும் பருவகால மழைவீழ்ச்சியின் போது டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தற்போது வரையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர். அங்குள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருடன் இணைந்து கழிவுகளை அகற்றும் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நாட்களில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தலையீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் டெங்கு ஒழிப்பு திட்டத்தினை அரச, தனியார் துறைகள் பொதுமக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். தொடர்ச்சியாக இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் இயலுமை காணப்படுகின்றது.

எதிர்வரும் பருவகாலத்தை தொடர்ந்து டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். பொதுவாக ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும். அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் நோயாளர்கள் அதிகரிக்க கூடும் என்பதால் அனைத்து துறையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்

டெங்கு நோய் எந்த வயதினரையும் பாதிக்கும். பதிவாகும் நோயளர்களில் 75 சதவீதமானவர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கு முன்பாக சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் தற்போது இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு என்பது ஒருவகை வைரஸ் ஆகும்.

டெங்கு நோயாளர்களை டெங்கு நுளம்புகள் கடிக்கும் பட்சத்தில் அந்த நுளம்பினால் ஏனையவர்களுக்கு டெங்கு நோய் பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும். பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும். அதனால் டெங்கு கட்டுபாட்டிற்கு இந்த காரணங்கள் பற்றி அவதானம் செலுத்த வேண்டியது அவசியம்.

முதலில் நுளம்புகள் பரவக்கூடிய பகுதிகளை தூய்மைப்படுத்துவது மிகவும் அவசியமாகும். தூய்மையான நீர் சேரும் பகுதிகளிலேயே டெங்கு நுளம்புகள் தங்கியிருக்கும். பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக், டயர், பூச்சாடிகள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் இடங்களில் டெங்கு நோய் அதிகரிக்கும். முடிந்தளவிற்கு மேற்படி பகுதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேபோல் நுளம்பு கடியிலிருந்து தப்பிக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

டெங்கு நோய்க்கு இலங்கானவர்கள் மற்றையவர்களுக்கு பரவாமலிருக்கும் வகையில் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டியது அவசியமாகும். அதற்காக உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். நுளம்பு கடியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான பூச்சி விரட்டித் திரவியங்கள் ஊடகாகவும் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். எவ்வாறாயினும் இந்த முறைமைகள் 100 சதவீதம் பலன் தருபவை அல்ல.

பிரதேச சபைகள், நகர சபைகள், பொது சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார பிரிவுகள், பாதுகாப்பு பிரிவுகளின் பங்களிப்புடன் நுளம்பு பெருகும் இடங்களை தூய்மைப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. டெங்கு நோய் அதிகளவில் பரவும் மாகாணங்களை மையப்படுத்திய விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக நோயாளர்கள் பதிவாகும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் எதிர்வரும் வாரங்களில் விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அப்பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும். அதற்காக இராணுவத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

நீர் நிரம்பிய பாத்திரங்களில் நீரை அகற்றினாலும் குடம்பிகள் தங்கியிருக்கூடும். எனவே நீர் நிரம்பாத வகையில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக ஐந்து அல்லது ஆறு நாட்கள் மாத்திரமே நுளம்புகள் உயிர்வாழும். அதனால் வாராந்தம் சுற்றுச்சூழலை தூற்மைப்படுத்த வேண்டியது அவசியமாகும். நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அண்மித்த பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அதனால் நோய் கட்டுப்பாட்டினை ஒருவரால் மாத்திரம் செய்துவிட முடியாது. இந்நாட்டில் அனைவரிதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

டெங்கு நோய்க்கு இலக்கானவர் எனின் கடினமான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் நோயின் பாதிப்பு அதிகரிக்கும்.

காய்ச்சல் ஏற்படும் போது பெரசிடமோல் தவிர்ந்த ஏனைய மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு காய்ச்சல் நோயாளிக்கும் வேறு மருந்துகளை வழங்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கவில்லை. சில நேரங்களில் பெரசிடமோல் மருந்தினால் நோய் முழுமையாக குணமடையாமல் இருக்கலாம்.

அந்த சந்தர்பங்களில் நோயாளர்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. நோய் இருப்பதால் பாரிய பிரச்சினைகள் ஏற்படாது. ஓய்வெடுப்பதால் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள முடியும். இளநீர்,தேசிக்காய், தோடம்பழம், ஜீவனி உள்ளிட்ட திரவ வகைகளை உட்கொள்வது மிகவும் உகந்தது ” எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply