சுமண ரத்ன தேரர் மீது கொலை முயற்சி? விளக்கமளித்த தேரர்!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தேரரை கெட்ட வார்த்தைகளால் திட்டி துப்பாக்கியால் சுட தயாரானதாக குற்றம் சாட்டியுள்ளார்.

விகாரையில் இருந்த நாயாலேயே தான் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நான் தற்போது கெவிலியாமடு விகாரையில் இருக்கின்றேன். சில மாதங்களுக்கு முன்னர் என்னை சுட்டுக்கொல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால், இரவு நேரங்களில் எனது பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி இரவு 12 மணியளவில் போதி மரத்திற்கு அருகில் உள்ள விளக்கை அணைப்பதற்காக சென்றேன். அப்போது அருகில் குறட்டைவிடும் சத்தம் கேட்டது. ஊர்காவற்படை வீரரும் பொலிஸ் உத்தியோகத்தரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

நான் சென்றது பயந்து எழுந்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைத்துப்பாக்கியை எடுத்து என்னை சுட முயன்றார். நான் ஹாமுதுருவே என்று கூறியதும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டார்.

அதனையடுத்து, உறக்கத்தில் இருக்கும் போது என்னை எப்படி பாதுகாக்க முடியும் என்று நான் கேட்டேன்.  அதன் போது பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி துப்பாக்கியால் சுட முயற்சித்தார்.

அப்போது விகாரையில் வளர்க்கப்படும் நாய் வந்து, பொலிஸ் உத்தியோகத்தர் மீது பாய்ந்தது, அவர் நாயுடன் போராடிக்கொண்டிருந்த போது, நான் உடனடியாக சென்று விகாரையின் மணியை அடித்தேன்.

இதன் பின்னர் கிராமவாசிகள் விகாரைக்கு வந்தனர். சம்பவம் குறித்து 119 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொலிஸாருக்கு அறிவித்தேன் எதுவும் நடக்கவில்லை.

இதனால், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட உயர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவித்தேன்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அதிகாலையில் விகாரைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்தார். என்னை சுட்டுக்கொல்ல முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் இதற்கு முன்னர் கெவிலியாமடு குளத்திற்கு அருகில் காணி ஒன்றை கைப்பற்றி வேலி அமைத்திருந்தார். கிராம மக்கள் அந்த வேலியை கழற்றி அகற்றியதால், அவர் என் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

என்னை கைது செய்யுமாறு கோரி அவரது மனைவி போராட்டம் நடத்தினார். அரச காணியை அனுபவித்து வருவதால், வரும் வருமானத்தில் பாதியை வறிய மக்களுக்கு வழங்குமாறு கூறியதால், இவர்கள் என் மீது கோபத்தில் இருக்கின்றனர்.

என் மீது கோபத்தில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை எனது பாதுகாப்புக்கு அனுப்பி வைத்துள்ளமை ஒரு சூழ்ச்சி” எனவும் சுமணரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply