அரச மரங்களை கண்டாலே அஞ்சும் தமிழ் மக்கள்!

சட்டவிரோதமான முறையில் பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி செயற்பாட்டாளருமான அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ்மக்களின் பண்டைக்கால வாழ்வியல் தொட்டு இயற்கை வழிபாட்டோடும்  சைவசமய நம்பிக்கை வழிபாடுகளோடும் தல விருட்சங்களாக வணங்கி மதிப்பளிக்கப்பட்டு இரண்டறக் கலந்திருந்த அரசமரத்தை இன்று தமிழர்கள் அல்லது  தமிழ் சைவர்கள் கண்டாலே அஞ்சுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று பௌத்த சிங்கள பேரினவாதமும் வடகிழக்கு  தமிழருக்கு தொல்லை தரும் அமைப்பாக தொல்லியல் திணைக்களமும் மாறியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே சங்கமித்தை வந்து இறங்கிய இடம் என குறிப்பிடப்பட்டு மாதகல் சம்பில்துறையில் பொதுமக்களுக்கு சொந்தமான பல காணிகளை கடற்படையின் உதவியுடன் அடாத்தாக சுவீகரித்து பாரிய வழிபாட்டிடம் தங்குமிடங்களை அமைத்துள்ளார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சங்கமித்தையின் பேரால் சுழிபுரம் பறாளாய் முருகமூர்த்தி ஆலய பழம்பெரும் தலவிருட்சமான அரச மரத்தை கோவில் நிர்வாகத்திற்கோ உரிய பிரதேச அரசநிர்வாக அலகுகளிற்கோ தெரிவிக்காது  பொதுமக்களின் கருத்துக்களை பெறமாலும் உரிய ஆய்வுகள் இன்றியும் அவசர அவசரமாக பௌத்த தொல்லியல் சின்னமாக வர்த்தமானியில் பிரசுரித்து இருப்பது என்பது  சைவ மதத்தின் பாரம்பரிய வழிபாட்டிடம் மீதான சமய ஒடுக்குமுறை என்பதோடு பௌத்தமத ஆக்கிரமிப்பாகவே இருக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலாசார அமைச்சினதும் தொல்லியல் திணைக்களத்தினதும்  இந்த அடாவடி  செயல் கடுமையான கண்டனத்திற்குரியது உடனடியாக இந்த வர்த்தமானி பிரசுரம் மீளப் பெறப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் மதவழிபாட்டு சுதந்திரம் தொல்லியலின் பேரால் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்ற குருந்தூர் மலை முதல் வெடுக்குநாறி என ஆரம்பித்து இன்று பறாளாய் முருகன் ஆலயம் என தொடர்கின்ற கதைகள் நிறுத்தப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்சி பேதங்கள் இன்றி தமிழ் அரசியல்தலைமைகள் ஒன்றுபட்டு வெகுசன போராட்டங்களை ஒழுங்கமைப்பதோடு நாடாளுமன்றத்திலும் இதனை வெளிப்படுத்தி குரல்கொடுப்பதோடு இராஜதந்திர மட்டங்களிலும் இதற்காக செயற்படவேண்டும் என அவர் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply