பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரைகள் எதற்கு? ஈ.பி.டி.பி கேள்வி!

பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கில் மனித புதைகுழிகள் மீதே விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாக, அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலை இலக்கு வைத்து தனது அரசியலுக்காக சொன்ன கருத்தாக இருக்கலாம்.

அவ்வாறு எனில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 1000 விகாரைகளை கட்டுவேன் என உறுதி அளித்த சஜித் பிரேமதாசாவை அவரது கட்சி ஆதரித்திருந்த நிலையில், தற்போது விகாரைக்கு எதிராக குரல் கொடுப்பது, மக்களை ஏமாற்றும் செயலே.

மன்னாரில் கிறிஸ்தவ, இந்து மதங்களுக்கு இடையில் முறுகல் நிலைமைகள் ஏற்பட்ட நிலையில் அவற்றை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்களே அவர்கள்.

இந்நிலையில் விகாரைகள் புதைகுழிகள் மீது அமைக்கப்பட்டு வருவதாக தற்போது கூறியுள்ளார். கடந்த காலங்களில் அரச படைகளில் அவரின் ரொலோ அமைப்பு சேர்ந்து இயங்கியது என்பதன் அடிப்படையில், மனித புதைகுழிகள் தொடர்பில் அவருக்கு தெரிந்திருக்க கூடும், அதன் அடிப்படையில் தனக்கு தெரிந்த விபரங்கள் மூலம், புதைகுழிகள் மீது விகாரைகள் அமைக்கப்படுவதாக தெரிவித்து இருக்கலாம்.

எம்மை பொறுத்தவரை இலங்கை ஒரு மத சுதந்திரமுள்ள நாடு. இங்கே எந்த மதமும் எந்த மதத்தையும் அடக்கி ஆள முயலக்கூடாது. பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள்.

தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொல்பொருள் திணைக்களம் உட்பட சில அரசியல்வாதிகள் முயல்கின்றனர். அவற்றை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply