திருகோணமலையில் மீண்டும் தொடரும் பதற்றம் – திடீர் படையெடுப்பில் பௌத்த துறவிகள்!

திருகோணமலை கிண்ணியா குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிக்குள் பௌத்த துறவிகள் தொடர்ச்சியாக சென்று வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், கடந்த இரு நாட்களாக பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் ஐவர் கொண்ட குழு தொடர்ச்சியாக அங்கு சென்று வருவதாகத் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மீது சந்தேகம் கொண்ட விவசாயிகளும் சமூக நிறுவனங்களும் குடியிருப்பாளர்களும் கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.மஹ்தியின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றுள்ளனர்.

அதனையடுத்து இது தொடர்பில் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமைகளை அவதானித்த எம்.எம்.மஹ்தி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

இக்குழுவினர் புதையல் அகழ்வதற்காக அல்லது ஏதேனும் அடையாளங்களை புதைப்பதற்கோ, மதம் சார்ந்த வணக்க தலங்களை அமைப்பதற்காகவோ வந்து செல்கின்றார்கள் என்ற சந்தேகம் மக்களை பீதிக்குள்ளாக்கியது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு தான் உடனடியாக சென்றதோடு, பிரதேச பொலிசாருக்கும், 119 எனும் அவசர பொலிஸ் முறைப்பாடு சேவைக்கும் அறிவித்ததோடு பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், சூரங்கல் இராணுவ முகாம் போன்றவற்றிற்கும் தகவல்களை வழங்கி அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை தனக்கு அறிய தாருங்கள் என கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் சிறுபான்மை சமூகம் வாழுகின்ற இடங்களில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் போன்று அல்லது கடந்த கால அனுபவங்கள் போன்று கிண்ணியாவிலும் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காக இந் நடவடிக்கை தன்னால் எடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply