தங்களுடைய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது மிஸ்டர் பிரசிடென்ட்? மனோ சாமாரி கேள்வி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்துள்ளதாகவும் அன்று அவர் கூறியதற்கும் இன்று அவர் நடந்துக்கொள்வதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில், நடைபெற்ற, தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இந்நாட்டில் சுதந்திரம் பெற்றோம் என நாம் கொண்டாடும் பெப்ரவரி 4ம் திகதிக்கு முன் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என ஜனாதிபதி விக்ரமசிங்க வாக்குறுதி அளித்திருந்தார்.

13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

13இல் பொலிஸ், காணி அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாது என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எம்.பி விக்கினேஸ்வரனை துணைக்கு அழைத்துக்கொண்டு வடக்கில் மாகாண நிர்வாக குழு அமைப்போம் என வாக்குறுதி அளித்தார்.

தொல்பொருள் திணைக்களத்தை அழைத்து காணிகளை விடுவியுங்கள் என கட்டளை இட்டார்.

திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி விலகினாரே தவிர ஜனாதிபதியின் கட்டளை நிறைவேறவில்லை.

தற்போது தேர்தல்களை பிற்போட சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது.

ஜனாதிபதி நேரடியாக சொன்னாலும், அவருக்கு நேரடி நெருக்கமாக அவரது அரசில் இருப்போர் சொன்னாலும் எமக்கு ஒன்றுதான்.

இப்போது ஜனாதிபதி முறைமையை அகற்ற போகிறேன் என்கிறார். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை துணைக்கு அழைத்துக்கொண்டு நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் என சொல்லாமல் சொல்கிறார்.

பிரிட்டீஷ் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசை அழைத்து, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு விசாரணையை கையளிப்போம் என நாடாளுமன்றம் வந்து வாக்குறுதி அளித்திருந்தார்.

இப்போது ஜேர்மனிக்கு போய் சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறார். விசாரணைகளுக்காக உள்ளூரில் மீண்டும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதாக சொல்கிறார்.

பெருந்தோட்ட துறையில் காணி பிரச்சினைக்கு இதோ தீர்வு, அதோ தீர்வு என்று சில அமைச்சர்கள் கூறினார்கள். ஆனால், எதனையும் செய்யவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதே நாடாளுமன்றத்தில், பிரதமராக சில காலம் இருந்த போது, நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கோரிக்கையை ஏற்று, உடனடியாக பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத தரிசு நிலங்களை பிரித்து பெருந்தோட்ட குடும்பங்களுக்கு வழங்குகிறேன் என வாக்குறுதி அளித்தார்.

அதற்கு “மனோ கணேசன் திட்டம்” என பெயரும் வைக்கிறேன் எனவும் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் வாக்குறுதி வழங்கினார்.

“ஐயா சாமி, எனது பெயர் வேண்டாம், எனது மக்களுக்கு காணி உரிமையை கொடுங்கள். அது போதும்” என்று அப்போதே நான் திருப்பி அவருக்கு பதிலளித்தேன்.

இன்று அந்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது மிஸ்டர் பிரசிடென்ட்?

கடைசியாக இப்போது மயிலத்தமடு கால்நடை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில், அதிகாரிகளை அழைத்து பணிப்புரை விடுத்தார்.

ஆனால், அங்கே புத்தர் சிலையை கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள். அங்குள்ள அம்பிட்டிய பிக்கு வாயை திறந்தால் தெருச்சண்க்காரர் போன்று பேசுகிறார்.

மேய்ச்சல் தரையில் பாரம்பரியமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த மக்களுக்கு நிலம் கையளிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, இப்போது கெளதமரையும் அங்கே இவர்கள் கொண்டு வந்து நிறுத்தி இருப்பது, மயிலத்தமடு, மாடுகளுக்கே அடுக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply