
இலங்கை வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 20 வருடங்கள் நிறைவடைகின்றது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் பலியானதுடன் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.
அதன்படி, 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் இன்று “தேசிய பாதுகாப்பு தினம்” அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் “தேசிய பாதுகாப்பு தினத்தை” மாவட்ட மட்டத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான நிகழ்வு காலி “பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு” முன்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.