
பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி இன்னும் நாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டை விட்டு வெளியேறக்கூடியதாகக் கருதப்படும் அனைத்து இடங்களுக்கும் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காடினார்.
கடந்த 19ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபருக்கு நீர்கொழும்பு, கட்டுவெல்லேகமவில் வசிக்கும் 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண் துப்பாக்கியை வழங்கியிருந்தார்.
கொலை சம்பவத்துக்கு பின்னர் இஷாரா தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கிடையில் இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் தம்பி ஆகியோர் கொலை தொடர்பான தகவல்களை மறைத்து குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.