வற் (VAT) வரி தொடர்பில் வெளிவந்த தகவல்!

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வற் (VAT) வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 11 ஆம் திகதியில் இருந்து பால் மற்றும் தயிர் மீதான வற் வரி நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன 11 ஆம் திகதி ஒப்புதல் அளித்தார்.

அதன்படி குறித்த திகதியில் தொடர்புடைய சட்டம் அமுலுக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு வருவாய்த் துறை பல வரித் திருத்தங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, திரவ பால் மற்றும் தயிர் தவிர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் நாப்தா மீதான வற் வரியும் நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

எனினும் பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, வெளிநாடு வாழ் தனிநபர்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரியை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வற் வரி பொருந்தும் என்று உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் மதிப்பு கூட்டப்பட்ட வரி திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply