
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வெலிகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் தற்போது பேசுபொருளாக உள்ள நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான குறித்த மாணவன், பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்தமையாலும், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் புனைப்பெயர் இல்லாமல் சுதந்திரமாக நடமாடிய காரணத்தாலும் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சுமார் 20 மாணவர்கள் குறித்த மாணவனின் விடுதிக்கு வந்து, தலைக்கவசத்தால் தலை மற்றும் முதுகு பகுதியில் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கியதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.