பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

சிலாபம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதும் மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அன்ரனி சில்வெஸ்டர் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் நேற்றிரவு படித்துக் கொண்டிருந்த குறித்த மாணவன், திடீரெனக் காணாமல் போனதை அடுத்து, அவரது பெற்றோரும், சகோதரர்களும் தேடிய போது, வீட்டிலுள்ள கிணற்றுக்குள் சடலமாகக் கிடந்துள்ளார்.

கிணற்றுக்குள் இருந்து மாணவனின் சடலம் மீட்கப்பட்டபோது, அவர் பயன்படுத்தும் கைத்தொலைபேசியும் அங்கு காணப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் கிணற்றின் மேற்பகுதியில் அமர்ந்திருந்து கைத்தொலைபேசியில் உரையாடிய போது தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் அல்லது தானே கிணற்றுக்குள் விழுந்து உயிரை மாய்த்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவனின் பெற்றோரிடமும் சகோதரர்களிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பொலிஸார்,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply