உட்கட்சி பூசலால் பிளவடைகிறதா ஐக்கிய மக்கள் சக்தி? ஹிருணிகா பகிரங்க குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட தலைமைகள், இருமுகங்கள் கொண்ட ஏமாற்றுக்காரர்களைத் தான் நம்புவதாக அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் சிலர் பாம்பு போன்றவர்கள் எனவும், கட்சியுடன் உறுதியாயிருக்கும் எம்மை கட்சித் தலைவர் நம்புவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலை குறித்து விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்துடன் பகல் முழுவதும் கதைத்து பேசிவிட்டு, இரவில் ஜனாதிபதி ரணிலுடன் சேர்ந்து பொழுது போக்கும் சிலரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தயவுசெய்து சஜித் பிரேமதாசவிடம் பேசி அவரை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள் என கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் ஹிருணிக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணிலை சந்திப்பவர்கள், தங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் பதவியில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஜனாதிபதியுடன் இணைவார்கள்.

ரணில் என்னை அழைத்தால் நான் சில விஷயங்களைச் சொல்வேன் என அவருக்கு நன்றாக தெரியும் என்பதால் ஜனாதிபதி என்னிடம் ஒருபோதும் பேசுவதில்லை, என அவர் கூறியுள்ளார்.

ஆரம்பத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார போன்றோர் கட்சி தாவிய போது ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது, யாருக்கும் ஜனாதிபதியுடன் இணையும் தைரியம் வந்திருக்காது எனவும் ஹிருணிக்கா தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply