தென்மராட்சியில் அத்துமீறிய வன்முறைக் கும்பல் – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டிற்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தென்மராட்சி மீசாலை மேற்கில் உள்ள வீடொன்றினுள் இன்றைய தினம் அதிகாலை 01 மணியளவில் வீட்டின் கதவுகளை உடைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்த வன்முறை கும்பல் , வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு கதவுகள் ஜன்னல்கள் என்பவற்றை உடைத்துள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் , தொலைகாட்சி பெட்டி , கதிரைகள் உள்ளிட்ட வீட்டு தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

வீட்டில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவர் இருந்த போதிலும் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், வீட்டு தளபாடங்கள் மற்றும் வீட்டுக்கு வைக்கப்பட்ட தீயினை அயலவர்கள் கண்ணுற்று, அதனை அணைக்க முற்பட்ட போதிலும், பெருமளவானவை தீக்கிரையாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply