
தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவேந்திர முனை துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் சட்டத்தரணிகளுடன் கந்தர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கந்தர மற்றும் தேவேந்திர முனைபிரதேசங்களைச் சேர்ந்த 26 மற்றும் 35 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ஹிக்கடுவ பொலிஸ் பிரிவின் குமாரகந்த பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள ஆடைக் கடைக்கு அருகில் நின்ற ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிமெல்லகமஹா பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனபினுவல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே இந்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி இரவு, ஹிக்கடுவ பொலலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரகந்த பகுதியில் உள்ள வீதிக்கு அருகில் உள்ள ஆடைக் கடை அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இருவரும் படுகாயமடைந்து கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆண் நபர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.