
16 ஆண்டுகள் கழித்து “சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பமாகின்றது.
இன்று (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டதுடன், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வுக்காக வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரி குழுவினர் இன்று காலை 7.00 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்பட்ட ரயிலில் சிறப்பு கண்காணிப்புப் பெட்டியில் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
கண்டியை நோக்கிப் பயணித்த இக்குழு, முதலில் மகாவலி ரீச் ஹோட்டலை சென்றடைந்ததுடன், அங்கு ஹெல பாரம்பரியத்திற்கு ஏற்ப அவர்களுக்காக சிறப்பு சிங்கள-தமிழ் புத்தாண்டு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு இந்தக் குழுவினருடன் மற்றொரு இராஜதந்திரிகள் குழுவும் இணைய திட்டமிடப்பட்டது. பின்னர் 44 பேர் கொண்ட குறித்த குழுவினர் “சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க தலதா மாளிகைக்குச் சென்று, அதன் பின்னர் அந்தக் குழு அதே புகையிரதத்தில் மீண்டும் கொழும்புக்கு நோக்கித் திரும்பும்.
இலங்கை மீண்டும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து வருவதுடன், இதுவரை நாட்டைச் சூழ்ந்திருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு, நாட்டிற்குள் சகவாழ்வு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை நட்பு நாடுகளுக்கு தெரிவிக்கவும், அந்தப் பயணத்திற்கு அவர்கள் அனைவரது ஆதரவையும் பெறும் நோக்கத்துடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .