
இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும், சில தகவல்களை வெளியிட இரு தரப்பினரின் ஒப்புதல் தேவைப்படுவதால் சிறிது காலம் எடுக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று (22) இடம்பெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊகட மாநாட்டில், இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் சீனக் கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் அனுமதிக்கப்படாது என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக தெரிவிக்கையில்,
அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதாகவும், அவை தொடர்பான அனைத்து தகவல்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்களை அவசரமாக யாராவது கேட்டால், அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தாக்கல் செய்து தகவல்களைப் பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் ஒப்புதலுடனும், தொடர்புடைய அமைச்சகங்களுடன் விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.