
வவுணதீவு பகுதியில் விவசாயி ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக நேற்று இரவு வயலுக்கு சென்றுள்ளார்.
வயல் சென்றவர் காலை ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற வேளையில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
பின்னர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.