
பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் 10ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையிலும், தொடர்ந்து நடைபெற்றுவரும் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ் அரச பேருந்து நிலையம் முன்பாக வல்லமை சமூக மாற்றத்துக்கான போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (13) காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது,
அரசே அம்சிகாவிற்கு நீதியை பெற்றுக்கொடு,
சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்து,
வாக்கு சேகரிப்புக்கு திரள்பவர்கள் சமூக நீதிக்கு ஒதுங்குவது ஏன்?
எமது நாட்டின் பண்பாடா பாலியல் வன்கொடுமை?
பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு இடமில்லை
முதலான வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி அதற்கேற்ற வகையில் நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறைகளில் உள்ள பொறுப்பான நபர்கள் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.