வவுனிய கொடூர வாள்வெட்டு சம்பவம் – ஒரு வாரத்தின் பின்னர் வெளியான அறிவிப்பு!

வவுனியா வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா தோணிக்கல்லில் வீட்டிற்குள் நுழைந்து  மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு மற்றும் வீடெரிப்பு தாக்குதலால் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே ஒரு வாரத்தின் பின்னர் 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. பலரிடமும் வாக்குமூலங்களும் பெறப்பட்டிருந்தன.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாள்வெட்டு மற்றும் வீடெரிப்பு சம்பவத்தில் மூச்சுத் திணறல் காரணமாக 21 வயது இளம் குடும்பப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 10 பேர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதில் எரிகாயங்களுக்குள்ளான இளம் குடும்பப் பெண்ணின் கணவனும் கடந்த வாரம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply