
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்தியர்கள் கொண்ட குழு நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் இருந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடிவரவு புலனாய்வுப் பிரிவினால் சந்தேகத்திற்கிடமான இரண்டு இந்தியர்களிடம் திடீரென நடாத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஏனைய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், இந்தக் குழு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்துள்ளது. அவர்களில், 17 பேர் சுற்றுலா விசாக்களிலும், நான்குப் பேர் குடியிருப்பு விசாக்களிலும், ஒருவர் வணிக விசாவிலும் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது மிரிஹானாவில் உள்ள தற்காலிக தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உடனடியாக இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.